Jesus Redeems Ministries

இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் உங்களுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள்!

என் நேசர் இயேசுகிறிஸ்து எவ்வளவு இனிமையானவர்! என்பதை இந்த முப்பது வருட ஊழியப் பாதையில் நான் கண்டிருக்கிறேன்.

1972ஆம் ஆண்டு கிருபையாக அவர் என்னை இரட்சித்தார்! 1974ஆம் ஆண்டு தமது தீர்மானத்தின்படி அவர் என்னை பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்து, அவருடைய கனமான ஊழியத்திற்கு என்னை அழைத்தார். ஆரம்பத்தில் நான் மறுத்தபோதிலும் அவருடைய அன்பு என்னை நெருக்கி ஏவினபடியினால் ஊழியத்திற்காக என்னை அவர் கையில் அர்ப்பணித்தேன்.

சுமார் நான்கு வருடங்கள் அவர் என்னை பாடுகளிலும், உபத்திரவங்களிலும் உருவாக்கி, 1978ஆம் ஆண்டு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தை ஆரம்பித்தார். ஆரம்பநாட்களில், ஆண்டவரே, என் இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களை ஆசீர்வதியும் என்று ஜெபித்துக்கொண்டிருப்பேன்.

ஒருநாள் அப்படி நான் ஜெபித்துக் கொண்டிருக்கும்போது, ஆண்டவர் என்னிடம். இது உன் ஊழியமா? என் ஊழியமா? என்று கேட்டார். அப்பொழுதுதான் என் தவறை நான் உணர்ந்தேன். ஆண்டவரே, என்னை மன்னியும்! இது உம்முடைய ஊழியம்தான்! நீர் ஆரம்பித்த ஊழியம், என்னை உம்முடைய ஊழியத்தில் ஒரு வேலைக்காரனாக வைத்திருக்கிறீர், உமக்கு ஸ்தோத்திரம் என்று என் தவறை உணர்ந்து ஜெபித்தேன். அந்த நாள் முதல், ஆண்டவரே, உம்முடைய ஊழியமாகிய இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களை ஆசீர்வதியும்! என்று ஜெபிக்க ஆரம்பித்தேன்.
]
1974ஆம் ஆண்டு அவர் என்னை ஊழியத்திற்கு அழைத்தபோது, முழு நேர ஊழியத்திற்கு நான் மறுத்தேன். அவர் தொடர்ந்து என்னோடு பேசி வந்தார். 1975ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள் நேரடியாக முகமுகமாக அவர் என்னோடு பேசினபோது, நான் பெலவீனன், ஊழியக்காரனாக இருந்து தவறிப்போனால் உம் நாமம் தூஷிக்கப்பட்டு போகுமே, என்னால் முடியாது! என்றேன். என்றாலும் அவரின் அன்பின் அழைப்பை மறுக்க முடியவில்லை, நீர் என் கையை பிடித்தால் சம்மதம் என்றேன்.
ஏசாயா 41:8-16 வசனங்களை நான் உனக்கு வாக்குத்தத்தமாக தருகிறேன். நீ கேட்டுக் கொண்டபடி, நான் உன்னை கரம்பிடித்து நடத்துவேன் (ஏசாயா 41:13) என்று எனக்கு அவர் வாக்குக் கொடுத்தார். அந்த வாக்குத்தத்தத்தின்படியே இந்த முப்பது ஆண்டுகளும் என்னை நடத்தி வந்திருக்கிறார். கடைசி வரை நடத்துவார் என்று விசுவாசித்திருக்கிறேன்.
ஒவ்வொரு ஊழியத்தை கர்த்தர் கொடுக்கும்போது, அதற்குரிய வாக்குத்தத்தத்தையும் கொடுத்தார். அந்த வாக்குத்தத்தத்தின்படியே அவர் அற்புதமாக நடத்தினதையும் கண்டிருக்கிறேன். எந்த இடத்திற்கு நான் ஊழியத்திற்குச் சென்றாலும், இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தில் எந்த காரியத்தை செய்ய முற்பட்டாலும் தேச சமுகத்தில் காத்திருந்து ஜெபித்து, அதற்குரிய வாக்குத்தத்தத்தை பெற்றுக் கொள்வது என் பழக்கம். அந்தக் காரியத்திற்காக ஜெபிக்கும்போதெல்லாம் அந்த வாக்குத்தத்தத்தை சொல்லிச் சொல்லி ஜெபிப்பதுண்டு.
கர்த்தர் வாக்குமாறாதவர், வாக்குத்தத்தம்பண்ணினதை நிறைவேற்ற உண்மையுள்ளவர் (எபிரெயர் 10:23). என் ஊழியப்பாதையில் என் ஆண்டவர் கொடுத்த வாக்குத்தத்தம் எனக்கு நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.
இப்பொழுதும் தேவனுடைய கூடாரம், ஜெபமலை, ஒருகோடி ஆத்துமாக்கள், ஊழியத் தேவைகள் என்று எல்லாவற்றிற்கும் கர்த்தர் கொடுத்த வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, ஜெபித்து, அற்புதங்களைக் காண்கிறேன்.

Comments